ஆசிரியை அடித்ததால் காயமடைந்த மாணவியின் கை அழுகியது
நெல்லை: ஆசிரியை அடித்ததால் காயமடைந்த மாணவியின் கையில் பாதிப்பு ஏற்பட்டு அழுகி வருகிறது. இதனால் அந்த மாணவியின் கை என்னாகுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.பாளை செந்தில்நகர் வெட்டுவான்குளத் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி பேச்சியம்மாள். பேச்சிமுத்து 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் பேச்சியம்மாள் மகள் காந்தலெட்சுமியை பாளையில் உள்ள ஒரு மகளிர் பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்தார்.
காந்தலெட்சுமி தற்போது 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதத்தில் ஒருநாள் அவர் வகுப்பறைக்கு தாமதமாக சென்றார். இதையடுத்து ஆசிரியை அவரை பிரம்பால் ஓங்கி அடித்தார். இதில் மாணவியின் வலது கையில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி காந்தலெட்சுமி பாத்ரூம் சென்று விட்டு தாமதமாக வரவே ஆசிரியை அவரை அழைத்து கம்பால் மீண்டும் அதே இடத்தில் அடித்தார். இதனால் அவரது கையில் ரத்தக் கட்டு ஏற்பட்டு வீ்ங்கியது. இதனை பார்த்த விடுதி வார்டன் மாணவியை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்ததில் கை அழுகியிருப்பது தெரிந்தது. இதுபற்றி டாக்டர்கள் எடுத்து கூறியும், பள்ளியை சேர்ந்தவர்கள் ஓன்றும் ஆகாது என மாணவியை அழைத்து வந்து விட்டனர்.
மேலும் மாணவியை பார்க்க அவரது தாய் வந்தபோது அவரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவ செலவுக்கான பில்லை காட்டி அத்தொகையை வசூலித்து கொண்டனர்.
மகளின் கையை பார்த்து பதறிய பேச்சியம்மாள் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்காக அவரை கூட்டி சென்றார். அங்கு மாணவிக்கு கையில் ஆபரேசன் செய்யப்பட்டு காயம் சரி செய்யப்பட்டது.
பின்னர் பேச்சியம்மாள் தனது மகளை அழைத்து கொண்டு நேற்று நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அங்குள்ளவர்கள் மாணவியை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்.
எனவே நேற்று பிற்பகலில் மாணவி மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்தவர்கள் ஊசி மட்டும் போட்டு மறுநாள் காலையில் எலும்பு முறிவு டாக்டரிடம் காண்பிக்குமாறு தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதனால் மீண்டும் நெல்லை தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிய மாணவி போலீசில் புகார் அளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.