சத்யம் மோசடி-ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை!!!

சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனமான மேடாஸை சத்யத்துடன் இணைக்க ராஜூ முயன்றபோது அதில் நடந்த நிதி மோசடிகள் அம்பலமாயின.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை பொய்யாக உயர்த்திக் காட்டி, பங்குகளின் விலை உயரக் காரணமாக இருந்ததாக ராஜூ மீது புகார் எழுந்தது.
இந் நிலையில் ரூ.5,700 கோடிக்கு மேல் பொய்யாகக் கணக்குக் காட்டியதாக ராமலிங்க ராஜு ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராஜு கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிபிஐ, இதில் ரூ.7,800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளதாக அறிவித்தது.
இந் நிலையில் சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. பின்னர் அதை மகிந்திரா நிறுவனம் வாங்கிவிட்டது.
இன்னொரு பக்கம் ஜாமீன் பெற ராஜு முயன்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சில காலம் கழித்து மீண்டும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதற்கிடையே ராமலிங்க ராஜூவுக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஹெபாடிடிஸ் நோய் தாக்குதலும் ஏற்பட்டதால் தனது சிறைவாசத்தின் பெரும் பகுதியை அவர் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டார்.
இடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூவின் தம்பி ராம ராஜு, சத்யம் முன்னாள் நிதி அலுவலர் வட்லாமணி சீனிவாஸ் உள்பட 9 பேர் பல்வேறு தருணங்களில் ஜாமீன் பெற்று விட்டனர்.
இந் நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் ராமலிங்க ராஜூ. இதையேற்று அவரை ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications