மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது: வைகோ
சென்னை: தேர்தல் கமிஷனால் மதிமுகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
மதிமுகவிற்கு கிடைத்துள்ள ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. ஆனாலும் இன்னும் 6 ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் போட்டியிட முடியும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன், நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்எல்ஏக்கள் நமக்கு கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும். மக்கள் மனதில் மதிமுகவின் அங்கீகாரம் நீடிக்கிறது.
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக இருக்கும். மக்கள் பிரச்சனைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை. தினமும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது.
கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை திமுக, அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதிமுக, கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது.
மதிமுகவினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதிமுக கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications