'2-ஜி ஸ்பெக்ட்ரம்': அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்-மத்திய அரசு விளக்கம்

தொலைத் தொடர்புத் துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில், ராசா மீது நடவடிக்கை கோரி பிரதமர் அலுவலகத்துக்கு நான் அனுப்பிய மனு மீது கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை எனில் அதை தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு 2 ஆண்டுகளாக பதில் தெரிவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது.
இந்த வழக்கு விசாரணையில் ஏன் இவ்வளவு கால தாமதம் என்பதை அரசு விளக்க வேண்டும். இந்த வழக்கில் ரூ.60,000 கோடி சம்பந்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
சாமியின் இந்த மனு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடுகையில், இந்த 2-ஜி விவகாரம் தொடர்பாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சில அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய நிலையில் மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது சரியா அல்லது தவறா என்று கூற முடியாத சூழல் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன், சிபிஐக்கு உரிய சான்றுகள் கிடைக்க வேண்டும் என்றார்.
அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், சாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications