எம்பிபிஎஸ்: அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கு பதிலளித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந் நிலையில், தமிழக அரசின் சார்பில் அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கிராமப்புற மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த மனு அடுத்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications