கல்மாடியின் அதிகாரங்கள் முழுமையாக பறிப்பு-புதிய குழு அமைப்பு
டெல்லி: சுரேஷ் கல்மாடி தலைமையிலான காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் முழு அதிகாரங்களும் கிட்டத்தட்ட முழுமையாக பறிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் பணிகளை மேற்பார்வையிட புதிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பை மத்திய அரசே கைப்பற்றியுள்ளது.
இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவை அமைச்சரவை செயலகம் நியமித்துள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும், ஒரு ஸ்டேடியத்தின் பொறுப்பை ஒப்படைத்துள்லனர். அந்த ஸ்டேடியங்களில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்குமாறு பணிகளை முடுக்கி விடுவது இவர்களின் பொறுப்பாகும்.
மேலும் இதுதொடர்பாக அவர்கள் நேரடியாக அமைச்சரவை செயலாளரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது கல்மாடிக்கும், காமன்வெல்த் போட்டிக்கும் கிட்டத்தட்ட தொடர்பு அறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நியமித்துள்ள குழு விவரம்:
ஜே.எஸ். தீபக், இணைச் செயலாளர் - கேம்ஸ் வில்லேஜை இவர் பார்த்துக் கொள்வார்.
சுபோத் குமார், கூடுதல் செயலாளர்- அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் இவர் கவனிப்பார்.
ஆர்.சி.மிஸ்ரா - இந்திரா காந்தி ஸ்டேடியம் மற்றும் கட்டுமான பிரச்சினைகளை கவனிப்பார்.
எஸ்.ஆர்.ராவ், கூடுதல் செயலாளர் - ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை கவனிப்பார்.
சசி சேகர் - டெல்லி பல்கலைக்கழக வளாகத்தை பார்த்துக் கொள்வார்.
கோபால்கிருஷ்ணா - தியான்சந்த் ஸ்டேடியம் மற்றும் தியாகராஜ் ஸ்டேடியத்தை கவனித்துக் கொள்வார்.
ரோஹித் நந்தன் - ஆர்.கே.கண்ணா டென்னிஸ் வளாகத்தையும், ஸ்ரீபோர்ட் வளாகத்தை கவனித்துக்கொள்வார்.
அமர்ஜீத் சிங் - யமுனா விளையாட்டு வளாகத்தை பார்த்துக் கொள்வார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 45 நாட்களே உள்ளன. ஆனால் பெரும்பாலான ஸ்டேடியங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. கட்டுமானப் பணிகள் இன்னும் முடியவில்லை. பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில், ஊழல் பிரச்சினைகள் வேறு எழுந்ததால் இந்தியாவின் மானம் கப்பலேறும் அபாயம் எழுந்தது.
இதையடுத்து மத்தியஅரசு தலையிட்டது. முதலில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெபால் ரெட்டி தலைமையில் அமைச்சர் குழுவை அமைத்து, கல்மாடியின் சில அதிகாரங்களை பறித்தது மத்திய அரசு. தற்போது முழுமையாக அவரது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.