திருமாவளவன் தலைமையில் மதுரை வக்கீல்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் மதுரை வக்கீல்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்னைத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிற இச்சூழலில் அதற்கு ஏதுவான வகையில் ஆட்சியதிகாரக் கட்டமைப்புத் தளங்கள் அனைத்திலும் தாய்த்தமிழுக்குரிய ஆளுமையை நிலைநாட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும்.
நீதித் துறை, நிர்வாகத் துறை, சட்டத் துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழக அளவில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் என்பது இந்திய அளவில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமையும்.
அந்த வகையில் தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக, சென்னை, மதுரை உயர்நீதிமன்றக் கிளைகளில் செயலாற்றிவரும் வழக்கறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் பகத்சிங், இராஜேந்திரன், பாரதி, நடராஜன், எழலரசு, இராஜா ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். எனினும் அக்கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
ஆகவே, மீண்டும் இக்கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் வகையில், இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வரும் 25.8.2010 அன்று புதுடெல்லியில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
இப்போராட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்த் தேசிய வழக்கறிஞர்கள், விடுதலைச் சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications