நேபாளத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கல்யாணம்-இந்து புரோகிதர் நடத்தி வைத்தார்
நேபாளத்தில் நடந்த முதல் வெளிநாட்டு ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் இது. இந்து நாடான நேபாளத்தில் இப்படிப்பட்ட திருமணம் நடந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான சஞ்சய் ஷா என்பவர் எஸ். கான் என்ற 30 வயது நபருக்கு காத்மாண்டுவின் டேகு பகுதியில் உள்ள இந்துக் கோவிலில் வைத்து தாலி கட்டினார். எஸ்.கான் குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கல்யாணத்திற்கு ப்ளூ டயமன்ட் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்தது.
இந்து திருமண முறைப்படி இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் கூறுகையில், இதைப் பார்த்து பெருமைப்படுவதா, இல்லையா என்று புரியில்லை. ஆனால் ஒரு திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அந்த முறைப்படி தான் நடந்தது. எனவே இது முறையான திருமணம்தான் என்றார்.
இந்த திருமணத்தில் பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் மணமக்களை வாழ்த்திப் பாடல்கள் பாடினர். இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமணத்தை முடித்துக் கொண்ட ஷாவும், கானும், இங்கிலாந்தில் குடும்ப வாழ்க்கையைத் தொடரவுள்ளனராம். அங்கு இதுபோன்ற திருமணங்களுக்கும், தம்பதிகளாக இணைந்து வாழ்வதற்கும் சட்டப்படி அனுமதி உள்ளதால் இங்கிலாந்தை தேர்வு செய்துள்ளனராம்.
திருமணத்தை முடித்துக் கொண்ட பின்னர் 200 டாலர் பணம் கொடுத்து முறைப்படி திருமண சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர் ஷா, கான் தம்பதியினர்.