தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு வீராசாமி
சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,
தமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
காற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர்ர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு. இதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.
மரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு, தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.
அதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.