போலி மதிப்பெண் விவகாரம்: தேர்வுத்துறை அலுவலகத்தில் வெளியாட்கள் நுழைய தடை
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தையடுத்து தமிழக அரசுத் தேர்வுத்துறை அலுவலகத்திற்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் போது 51 மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்பித்தது பிடிபட்டனர்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் திருவேங்கடம், கல்லூரி கல்வி இயக்கக ஊழியர் ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தை தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்திற்குள் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில்,
தேர்வு நுழைவு சீட்டு கிடைக்க பெறாமை, பெயர் திருத்தப், பிறந்த தேதி திருத்தம், மறு பிரதி சான்றிதழ், தேர்வு முடிவுகள் கிடைக்க பெறாமை, சான்றிதழ்களின் உண்மை தன்மை கோரல் போன்ற பல்வேறு தகவல்களை பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் பிற அலுவலக பணியாளர்களும் தேர்வுத்துறை அலுவலகத்திற்கு தினமும் வருகிறார்கள்.
இவர்களின் தேவையை பூர்த்தி செய்தல் துறையின் தலையாய கடமையாகும்.
அதே நேரத்தில் தகவல் கோரி வரும் எந்த ஒரு நபரும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குள் நுழைய அனுமதிப்பதால் சிக்கல்கள் உருவாகின்றன.
அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு தகவல் கோரி வரும் எந்த ஒரு நபரும் இனி பிரிவுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
குறைகளைக் களைய வேண்டி வரும் நபர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களே நேரில் சந்தித்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அலுவலர்கள் பார்வை நேரத்தை, பொது மக்கள் பார்வையில் தெரியும்படி தங்கள் வாசலில் ஒட்டி வைக்க வேண்டும். வெளியாட்கள் பிரிவிற்குள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட பிரிவு கண்காணிப்பாளர்களின் கடமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications