முல்லைப் பெரியாறு அணை: டிசம்பர் மாதத்தில் ஐவர் குழு ஆய்வு
டெல்லி: டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் தமிழக பகுதிகளையும், பின்னர் கேரள பகுதிகளையும் 5 பேர் கொண்ட மத்தியக் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த 5 பேர் குழுவின் விசாரணை அக்டோபர் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த குழுவிடம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழகம், கேரளாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாக கூறி அதன் அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து அதற்கான ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள அணையே நல்ல நிலையில் இருப்பதால் புதிய அணை தேவை இல்லை என்று தமிழகம் சார்பில் ஆதாரங்களுடன் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போதுள்ள அணையில் 147 அடி வரையில் தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் தமிழக அரசின் கோரிக்கை.
இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் விசாரணை நடத்துவதற்காக 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட குழுவை நீதிமன்றம் நியமித்தது.
குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் பொறியாளர் சி.கே.தட், ஆகியோர் உறுப்பினர்களாகவும் உறுப்பினர் செயலாளராக சி.கே.மேத்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணை விவகாரம் தொடர்பாக இந்தக் குழு தமிழகம் மற்றும் கேரளாவின் கருத்துக்களை கேட்டறிந்து, விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் குழு முதல் முறையாக கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி டெல்லியில் கூடி விவாதித்தது.
இதன் இரண்டாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தமிழக அரசின் உறுப்பினரான ஏ.ஆர்.லட்சுமணன், கூட்டம் தொடங்கியவுடன் கேரள அரசின் வக்கீல் மோகன் கட்டார்க் நேரில் ஆஜராகி முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்று 15 நாட்களுக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
கேரள அரசுக்கு அனுமதி வழங்கியது போல தமிழக அரசும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கும் கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை வலுப்படுத்த இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை என்பது குறித்தும், மேலும் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் இந்த குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் அப்போது இரு மாநிலங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இரு மாநில வக்கீல்கள் நேரில் ஆஜராகி தங்கள் வாதங்களை தொடங்குவார்கள்.
இரு மாநிலங்களின் சாட்சிகளாக நிபுணர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கேரளாவில் தற்போது பருவமழை கடுமையாக பெய்து வருவதால் டிசம்பர் மாதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் தமிழக பகுதிகளையும், அதன் பின்னர் கேரள பகுதிகளையும் 5 பேர் குழுவினர் நேரில் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications