தலைமை தகவல் ஆணையர் தேர்வு-கருணாநிதியை சந்திக்கும் ஜெ.-ஓ.பி.யை அனுப்புகிறார்
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பங்கேற்கவில்லை. மாறாக துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைக்கிறார்.
தலைமை தகவல் ஆணையரை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்பது விதியாகும். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியின்போது தற்போதைய தகவல் ஆணையர் ராமகிருஷ்ணனை முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் சேர்ந்துதான் தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஆணையரை தேர்வு செய்ய இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஒரு அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்.
எனவே இன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், கருணாநிதியும், ஜெயலலிதாவும், சட்டசபைக் கூட்டங்களைத் தவிர வேறு எங்குமே சந்தித்துக் கொண்டதில்லை என்பதால் இன்று இரு துருவங்களும் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாக இருந்தது.
ஆனால் அது நடைபெறாது என்பது தற்போது தெரிந்து விட்டது. காரணம், ஜெயலலிதா இன்று கூட்டத்திற்குப் போகவில்லை, மாறாக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைக்கிறார்.
இதன் மூலம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு பறிபோய் விட்டது.












Click it and Unblock the Notifications