ஆஸ்திரேலியாவில் தொடரும் இழுபறி-ஆட்சி அமைவது 3 சுயேச்சைகளின் கையில்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைப்பு முயற்சிகள் தொடர்ந்து இழுபறியாக உள்ளன. 3 சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்தைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சி அமைப்பது தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. 20 லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் தலா 73 இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுயேச்சைகளாக நின்று வென்றுள்ள ராப் ஓக்ஷாட், டோனி வின்ட்சர், பாப் கட்டேர் ஆகியோரிடம் இரு கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.