செப் 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேர்தல் அதிகாரிகள்
நெல்லை: வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தும் பணிகள் வரும் 27-ம் தேதிக்குள் முடிவடையும், செப்டம்பர் 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குகாக ஜூலை 26-ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.
பெயர் சேர்க்க 85, 969 பேரும், நீக்கத்திற்கு 429 பேரும், திருத்தத்திற்கு 4, 139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இடமாறுதல் தொடர்பாக விண்ணப்பித்துள்ள 1, 508 பேரையும் சேர்த்து மொத்தம் 92 ,045 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவற்றை அங்கன்வாடி பணியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர் எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 1, 431 பேர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்பணி வருகிற 27-ம் தேதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.