கேரளாவில் 6 நாளில் ரூ.155 கோடிக்கு மது விற்பனை: ஒரே நாளில் ரூ. 30 கோடி விற்பனை
கொல்லம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிலும் ஓணம் நாளான நேற்று மட்டும் ரூ. 30 கோடிக்கு குடித்துள்ளனர்.
கேரளாவில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப கால கணக்குபடி இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஓணம் பண்டிகை, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155.61 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது கடந்த வருடத்தை விட 18 சதவிகிதம் கூடுதல் ஆகும். நேற்று முன்தினம் மட்டும் ரூ. 30 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.
விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது. தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.
பட்டாசுன்னா வெடிக்கணும், பண்டிகைன்னா குடிக்கணும். இந்த பழக்கம் எப்போது மாறப் போகிறதோ!












Click it and Unblock the Notifications