அரசியல்வாதிகள் வளைத்து போட்டுள்ள நிலத்தை கைப்பற்றுங்கள்: ராமதாஸ்
திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதூரில் அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி அங்கு கிரீன் பீல்டு விமான நிலையத்தை அமைக்கலாம். அதை விட்டுவிட்டு விவசாய நிலங்களை கைப்பற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கும் பணிக்காக 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதி்ல் பேசிய ராமதாஸ், விமான நிலைய விரிவாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலம், தனியாருக்கு தொழிற்சாலை அமைக்க நிலத்தை தாரை வார்ப்பது போன்ற பிரச்சனைகளில் எதிர்ப்பு தெரிவித்து அதிக அளவில் போராடியவன் நான்.
இதற்காக கோவை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.
விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், இருக்கும் விவசாய நிலங்களையும் அரசே அபகரித்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும்.
மகாராஷ்டிரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக 10,000 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சித்தபோது மக்கள் பெருமளவில் போராடினார்கள். ஒரு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வரை கொடுக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் மக்கள் அதை எதிர்த்தார்கள்.
இறுதியாக அந்த நிலத்தை எடுக்கலாமா வேண்டாமா என மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதில் மக்களின் எதிர்ப்பை தெரிந்து கொண்ட அரசு அந்தத் திட்டத்தை கைவிட்டது அந்த மாநில அரசு.
அதேபோல் கிரீன்பீல்டு விமான நிலையம் அமையவுள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்தி முறையாக மக்களின் அனுமதி பெற்று இந்த நிலத்தை எடுக்கலாம்.
வளர்ச்சித் திட்டங்களை வரவேண்டாம் என கூறி நாட்டின் முன்னேற்றத்துக்கு நான் முட்டுக்கட்டை போடவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலேயே அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விமான நிலையப் பணியை தொடங்குங்கள் எனக் கூறுகிறேன்.
அல்லது சென்னைக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அலமாதி பழைய விமான நிலையத்தை புதுப்பிக்கலாம் என்றார் ராமதாஸ்.