10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி: நெல்லையில் பணி துவங்கியது
நெல்லை: தமிழகத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் இக்கருவியை பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நோய்களை கண்டறிய எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பிலிம் தட்டுபாடு காரணமாக எக்ஸ்ரே எடுப்பதில் காலதாமதம் ஆகிறது. இதனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திட்டமிட்டது. கடந்த 2008-09-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தலா ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக துரிதமாக நடந்து வருகிறது. மருத்துவமனை கீழ்தளத்தில் அறை எண் 32ல் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த அறை நவீன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் துல்லியமாக நோய்களின் தன்மையை கண்டறிய முடியும்.