சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்: பெண் எம்.பிக்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை: நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்பிக்களின் கூட்டத்தில் பெண் எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் தனித்தனியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்ததும் கருணாநிதி, கொஞ்சம் பேர்தான் இருக்கிறீர்கள் மொத்தமாக இருந்திருக்கலாமே என்று கூறிவிட்டு, சேர்ந்து உட்காராவிட்டாலும் பரவாயி்ல்லை, சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் என்றார்.
இதையடுத்து பெண் எம்பிக்களும் திமுக மகளிர் அணியினரும் சேர்ந்து அமர்ந்தனர்.
அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு:
காலையில் எம்பிக்கள் கூட்டத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழக அமைச்சரவையின் 47வது கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். இதில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு நடத்தினார்.
கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர, தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் விரிவாக ஆய்வு நடத்தினார். 27, 28ம் தேதிகளில் திருச்சியில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடக்கிறது. அதில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசிய முதலவர், மாநிலம் முழுவதும் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளின் வேகம் ஆகியவை குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.
சிறு விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும், தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.