மும்பையில் ரூ. 6.6 கோடி வைரம் திருட்டு-துபாயில் சிக்கிய நால்வர்
மும்பை: மும்பையில் நடந்த கண்காட்சியில் திருடப்பட்ட ரூ. 6.6 கோடி வைர நகைகள் துபாயில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 4 வெளிநாட்டவர்கள் துபாய் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெண். இன்னொருவர் வெனிசூலாவைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து மும்பை இணை போலீஸ் கமிஷனர் ஹின்சு ராய் கூறுகையில், இஸ்ரேலைச் சேர்ந்த தலுமி குரூப் என்ற நிறுவனம், மும்பை காரேகான் கிழக்கில் உள்ள என்எஸ்இ மைதானத்தில் இந்தியா சர்வதேச நகைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த 887.24 கேரட் வைரம் காணாமல் போய் விட்டது. இதன் மதிப்பு ரூ. 6.6 கோடியாகும்.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் வைரங்களை திருடியது தெரிய வந்தது. நால்வரும் வெளிநாட்டவர் என்பதால் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்ப்பட்டன.
இந்தநிலையில் இந்த நான்கு பேரும் மும்பையிலிருந்து துபாய் சென்றனர். அங்கு நடந்த சோதனையில் நால்வரும் சிக்கினர். வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிக்கிய நால்வரில் ஒருவர் பெண், அவரது பெயர் குரேரோ லூகோ எல்வியா கிரிஸ்ஸல், 24 வயது. மெக்சிகோவைச் சேர்ந்தவர். அதேபோல கேம்பாஸ் மொலன் எலியாஸ், 39 மற்றும் கான்சோலஸ் மல்டோனடோ மாரிசியோ என்ற 24 வயதுக்காரர் ஆகியோரும் மெக்சிகர்களே. குதிரஸ் ஓர்லான்டோ என்பவர் வெனிசூலாவைச் சேர்ந்தவர்.
இவர்கள் துபாய் வழியாக ஹம்பர்க் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து இன்டர்போர் மூலமா துபாய் விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது.
நகைக் கண்காட்சி நடந்த இடத்தை ஏற்கனவே சில முறை பார்த்து நோட்டம் விட்ட பின்னரே திருட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம் என்றார் ராய்.