அதிமுக நிர்வாகிகளுடன் ஜெ. திடீர் ஆலோசனை- கோவை, திருச்சி கூட்ட சிடி கொடுத்து அனுப்பினார்
சென்னை: அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று திடீரென கூட்டி ஆலோசனை நடத்தினார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அப்போது கோவை, திருச்சியில் நடந்த கூட்டத்தில் தான் பேசிய சிடிக்களை அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்து தமிழகம் முழுவதும் மக்களுக்குப் போட்டுக் காட்டுமாறு அறிவுறுத்தினார்.
தேர்தல் எப்போது வருகிறது என்று தெரியாத நிலையில் அதுதொடர்பான பூர்வாங்கப் பணிகளில் ஜெயலலிதா தீவிரமாக இறங்கியுள்ளார். ஊர் ஊராகப் போய் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதிமுக குடும்பத்து திருமணங்களை நடத்தி வைக்கிறார். கட்சியினருடனும் அவ்வப்போது ஆலோசனைகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் ஜெயலலிதா. மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு போன் செய்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அனைவரும் போயஸ் கார்டன் விரைந்து வந்தனர். பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் ராகு காலம் குறுக்கிட்டதால் மாலை 4.45 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.
அப்போது தேர்தல் ஆயத்ததப் பணிகள் குறித்து அவர்களுடன்முக்கிய ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. பல்வேறு அறிவுரைகளையும் கூறினார். மேலும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், கோவை, திருச்சி கூட்டங்களில் ஜெயலலிதா பேசிய பேச்சின் சிடிக்கள் தரப்பட்டன.
இக்கூட்டத்தில், அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், ப.வளர்மதி, தளவாய்சுந்தரம், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, மருத்துவர் அணி தலைவர் மைத்ரேயன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ஜெயக்குமார், வக்கீல் அணி செயலாளர் மனோஜ் பாண்டியன், மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா உள்பட மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தை முடித்து வெளியே வந்த நிர்வாகிகளை அணுகிய செய்தியாளர்கள் உள்ளே என்ன பேசினீங்க, அம்மா என்ன சொன்னாங்க என்று கேட்டபோது அதுகுறித்து விளக்க மறுத்து விட்டனர். தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம், அம்மா பேசிய பேச்சு அடங்கிய சிடியை பட்டிதொட்டியெங்கும் போட்டுக் காட்டப் போகிறோம் என்று மட்டும் தெரிவித்தனர்.
234 தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள்:
இக் கூட்டத்தில் தமிழகத்திலுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அனைத்து சட்டசபை தெகுதிகளுக்கும் தலா 18 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் அனைவரும் கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசியாகவும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு விலைபோகக் கூடிய கட்சியினராக இருக்கக் கூடாது.
கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளில் நியமிக்கப்பட்ட பூத்கமிட்டி உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளிடம் விலை போய்விட்டதால், அப்படிப்பட்ட கட்சியினரை தேர்வு செய்யக் கூடாது. ஒரு மாத்திற்குள் தொகுதி, பூத் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அதிமுக, ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications