நெல்லையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடைகளில் திருவிழா
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை மிஞ்சும் வகையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மது விற்பனையானது.
நெல்லை மாவட்டத்தில் 223 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.1 கோடி முதல் ரூ.1.20 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் இதை மிஞ்சும் விதமாக கடந்த 22-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 11 தாலுக்காகளிலும் மதுபானங்கள் விற்பனை 2 மடங்கு அதிகமாகியுள்ளது.
அன்றைய தினம் தாலுகா வாரியாக மதுவிற்பனை விபரம் வருமாறு,
சிவகிரி 12.80 லட்சம், சங்கரன்கோவில் 22.50 லட்சம், தென்காசி மற்றும் செங்கோட்டை 28.54 லட்சம், ஆலங்குளம் மற்றும் வி.கே.புதூர் 19.40 லட்சம், அம்பை 21.80 லட்சம், நெல்லை 26.75 லட்சம், ராதாபுரம் 11.11 லட்சம், நான்குநேரி 25.50 லட்சம், பாளையங்கோட்டை 23.80 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரத்து 250க்கு மது விற்பனையாகியுள்ளது. கோவில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி 22-ம் தேதி கூடுதல் விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.