உமாசங்கருக்கு ஆதரவான போராட்டத்திற்கு அனுமதி தர வேண்டும்-உயர்நீதிமன்றம்
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காதது தவறு. உடனடியாக அனுமதி தர வேண்டும் என சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான ஜாதிச் சான்றிதழ் கொடுத்ததாக கூறி உமாசங்கரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் தான் அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தியதால்தான் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உமாசங்கர் கூறுகிறார். இதுதொடர்பாக வழக்கும் போட்டுள்ளார். தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், உமாசங்கருக்கு ஆதரவாக ஜூலை 30ம் தேதி சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டு காவல்துறை ஆணையரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
ஆனால் இந்த விண்ணப்பத்தை ஆணையர் நிராகரித்து விட்டார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சக்திவேல் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தனபால்,
அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்டது. ஜனநாயக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கூடாது என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜனநாயக நடவடிக்கைகளை மறுத்து அவர்களின் உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.
எனவே, இந்த விவகாரத்தில் இந்த போராட்டத்துக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தேதி மற்றும் இடத்தை குறிப்பிட்டு புதிதாக விண்ணப்பித்தால் அதற்கான அனுமதியை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.