ஜாதிவாரி கணக்கெடுப்பு: இன்னும் முடிவெடுக்கலையே: இது மத்திய அரசின் 'லேட்டஸ்ட்' பல்டி!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு 'பல்டி' அடித்துள்ளது.
இந்த விஷயத்தில் மாறி மாறிப் பேசி வரும் மத்திய அரசின் 'லேட்டஸ்ட் பல்டி' இதுவாகும்.
ஜாதிவாரி இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களில் முக்கியமானவரான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் ராஜ்யசபாவில் கூறுகையில்,
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துவிட்டது. இந்த பரிந்துரை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் அமைச்சரவைதான் இறுதி முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.
இப்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்தே ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று முக்கிய கட்சிகள் கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை இந்த விஷயத்தை ஜவ்வாக இழுத்தடித்து, பின்னர் ஏதாவது காரணம் காட்டி இந்த விவகாரத்தை ஊத்தி மூடலாம் என்று காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், சில எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications