மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு கட்டாயம் மதிக்க வேண்டும்-கி. வீரமணி
மதுரை: கூட்டணி தர்மம் பாதுகாக்கப்பட்டால் தான் ஆட்சி நிலையாக இருக்கும். எனவே, மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து தி.க. தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இதற்கு மத்திய அரசு உடனே செயல்வடிவம் தர வேண்டும்.
இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.
நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான தேசிய வரி விதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவு பல்வேறு இடர்பாடுகளுக்கு வழி வகுக்கும் என கலைஞர் எழுதிய கடிதத்தை ஏற்றதற்கு நன்றி தெரிவி்த்துக் கொள்கின்றேன்.
கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளைப் பாதிக்காத அளவிற்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் இருக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இலங்கை அரசு செயல்படாமல் மந்த நிலையில் உள்ளது. எனவே, உடனே மனிதாபிமான முறையில் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
கல்வி, வேளாண்மை போன்ற பல்வேறு முக்கிய துறைகள் பொதுப்பட்டியலில் இருக்கின்றது.
இந்த நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளைக் கலக்காமல், தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதோடு, மத்திய மாநில உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக, தற்போது உள்ள மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் போன்றவர்கள் அவசரத்தில் அள்ளித் தெளிக்கும் கோலத்தால் நாட்டிற்கு பல கேடுகள் ஏற்படும் நிலை உருவாகலாம்.
கூட்டணி தர்மம் பாதுகாக்கப்பட்டால் தான் ஆட்சி நிலையாக இருக்கும். எனவே, மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications