சவரன் விலை மீண்டும் ரூ.14 ஆயிரத்தைத் தாண்டியது!
சென்னை: ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.14 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.
சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை வழக்கம் போல ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே உள்ளது. ஆனி, ஆடி மாதங்களில் தங்க விற்பனை மிக மந்தமாக நடைபெற்றது. ஏனெனில் இந்த மாதங்கள் சுப காரியங்கள்செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இல்லை என்று கருதப்பட்டு வருவதால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது.
ஆனால் ஆவணி பிறந்ததும் தங்கத்தின் விலை 'டாப்'புக்குப் போகத் துவங்கியது.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் மக்கள் நகைகள் வாங்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவு மீண்டும் சவரன் ரூ.14 ஆயிரத்தை எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,743-க்கும், பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 944-க்கும் விற்பனையானது. நேற்று பவுன் தங்கம் ரூ.176 அதிகரித்து, ரூ.14 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,765-க்கு விற்பனையாகியது.