அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா-ராகுலுக்கு பிரதமர் உறுதி
டெல்லி: நில கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என ராகுல் காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
உ.பி.யைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புடை சூழ பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவரிடம், நீண்ட காலமாக நில கையகப்படுத்தல் சட்ட திருத்த மசோதா நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். பின்னர் அலிகார் பகுதியில் கட்டாயப்படுத்தி விவசாயிகள் அவர்களுடைய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
நிலம் கையகப்படுத்ததல் (திருத்தம்) மசோதா 2007 நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இதற்குக் காரணம் இந்த மசோதாவுக்கு திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே என்பது குறிப்பிடத்தக்கது.