பா.ம.க. பிரமுகர் கொலை: மதுரை கோர்ட்டில் 6 பேர் சரண்
கல்லிடைகுறிச்சி: பாமக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
நெலலை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன். பா.ம.க. பிரமுகரான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சித்ரபுத்ரன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதில் சித்ரபுத்திரனின் மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம் ஆகியோரும் பெருமாள் பாண்டியனின் உறவினர்கள் சுப்பையா, சின்னதம்பி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அம்பை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாள் பாண்டியனை சித்ரபுத்ரன், அவரது மகன்கள், மருமகன்கள் மற்றும் கூலிபடையினர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெருமாள் பாண்டியன் கொலை தொடர்பாக சித்ரபுத்ரன், அவரது மகன்கள் வெள்ளைபாண்டி, பரமசிவன், காளிமுத்து, முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சித்ரபுத்ரன், குமார்சக்தி, இசையழகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 10 பேரையும் போலீசார் வலை வீசித் தேடி வந்த நிலையில் அவர்களில் பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சித்ரபுத்ரனின் மகன்கள் பரமசிவன், காளிமுத்து, முத்து கிருஷ்ணன், மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, இசக்கிமுத்து, ஆலங்குளம் மறந்தையைச் சேர்ந்த சுருட்டை முருகன் ஆகிய 6 பேரும் மதுரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் 6 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications