புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டாம்-தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது 471 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1.11 லட்சம் மாணவர்கள் பிஇ படிப்பி்ல சேர்ந்துள்ளனர். இது அரசு கோட்டாவின் கீழ் மட்டும் வருவது. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டும்.
தற்போது 8 ஆயிரத்து 172 இடம் காலியாக உள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகள் சலுகையை பயன்படுத்தி 71,590 பேர் இந்த ஆண்டு என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்வழி என்ஜினீயரிங் படிப்பில் 1,378 பேர் சேர்ந்துள்ளனர். கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையும் என்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள என்ஜீனியரிங் கல்லூரிகள் போதுமானதாகும். மேலும் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தால் அடிப்படை அறிவியல் படிப்புகள் பாதிக்கப்படும். அதை அனுமதிக்க முடியாது என்றார் பொன்முடி.