ரூ. 2 கோடி பரிசு-ஜெ. வழக்கு: இன்னொரு நீதிபதியும் விசாரிக்க மறுப்பு

1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.2 கோடி வந்தது. இந்த காசோலைகளை அரசு கணக்கில் வரவு வைக்காமல் தனது சொந்தக் கணக்கில் போட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக 1996ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் அப்போதைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
10 ஆண்டு காலத்துக்குப் பின் 2006ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என் மீதான பிறந்தநாள் பரிசு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சி.டி.செல்வம் முன் சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி தாக்கல் செய்த மனுவில்,
ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், இப்போதைய நீதிபதி சி.டி. செல்வம் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருந்து ஆஜராகியுள்ளார். எனவே, நீதிபதி செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. அவருக்கு பதிலாக வேறொரு நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதி சி.டி. செல்வம் ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கை நானும் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி வேறொரு நீதிபதி விசாரிக்க வசதியாக அது தொடர்பான பரிந்துரையை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மதிவாணனுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரக்கு வந்தபோது இதை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி மதிவாணனும் கூறிவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் வேறு நீதிபதிக்கு மாற்றப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications