தமிழகம் முழுவதும் அதிரடி வாகன சோதனை-பலர் சிக்கினர்
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அதிரடியான வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் லைசென்ஸ் இல்லாதோர், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டாதோர் என பலரும் பிடிபட்டு அபராதம் செலுத்தினர்.
மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு உரிய ஆவணங்களையும், வாகனம் ஓட்டுவதற்கான லைசென்சையும் வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும். மேலும், இரவு நேர விபத்துக்களை தவிர்க்க வாகனங்களின் முன்னும், பின்னும் ஒளியை பிரதிபலிக்கும் சிவப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் ராஜாராம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது.
லாரிகள், வேன்கள், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. வாகனங்களுக்குரிய இன்சூரன்ஸ், உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய வாகன சோதனை நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது.
இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பல சிக்கின. அவற்றை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.