அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தை திமுக கூட்டம் மிஞ்சியாக வேண்டும்-கே.என்.நேரு
திருச்சி: திருச்சியில் அதிமுகவினர் நடத்திய கூட்டத்திற்குத் திரண்ட கூட்டத்தை மிஞ்சும் வகையில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றாக வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமான கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தி்முகவும் பொதுக் கூட்டம் போடுகிறது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
இதுதொடர்பான திமுக தொண்டர்கள் கூட்டம் உப்பிலியாபுரத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நேரு பேசுகையில்,
திருச்சியில் செப். 8-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் ரூ. 400 கோடிக்கு திட்டங்களை முதல்வர் கருணாநிதி தொடக்கிவைக்கவுள்ளார்.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து 3,895 வாகனங்களில் 96,000 பேர் கலந்து கொண்டதாக காவல் துறையினர் புள்ளிவிவரம் கொடுத்துள்ளனர்.
அதிமுக கூட்டத்தை விஞ்சும் வகையில், திருச்சியில் செப். 8-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும்.
இதற்காக, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.
கோவை, திருச்சி ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா குறிப்பிட்டது, தனது கட்சிக்காரர்களை தக்கவைத்துக் கொள்ளும் உத்தியாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றார் நேரு.