ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி: மாநில அரசுகளுக்கு உத்தரவு

மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க அனைத்து மாநில அரசுகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
துணை ராணுவத்தை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது. எனினும் இதனால் எதிர்பார்த்த அளவிற்கு பயன் இல்லை. வன்முறையை கைவிட்டு அமைதிப்பாதைக்கு திரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான திட்டத்தை கடந்த ஓராண்டுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால் இத்திட்டத்தாலும் பலன் இல்லை. மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
நிதியுதவி திட்டம் பற்றி பெரும்பாலான மாவோயிஸ்டுகளுக்குத் தெரியவில்லை. அதனால் தான் இத்திட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வும் இல்லை என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, இத்திட்டம் பற்றி மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிதியுதவி திட்டம் அனைத்து மாவோயிஸ்டுகளுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசுகளை விளம்பரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மிகவும் பின்தங்கிய பகுதியில் ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தான் இளைஞர்கள் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்கின்றனர். இதைத் தடுக்கும் நோக்குடன் இந்த நிதியுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு தலா ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். மாவோயிஸ்டுகள் சரணடைந்த உடன் இந்தத் தொகை அவர்களது பெயரில் வங்கியில் முதலீடு செய்யப்படும்.
அவர்களின் விருப்பதற்கு ஏற்ப அவர்களுக்கு மூன்றாண்டுகள் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 3,000 வீதம் உதவித் தொகை அளிக்கப்படும்.
பயிற்சியை முடித்து அமைதியான வாழ்க்கையை அவர்கள் தொடங்கும் போது வங்கியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாவோயிஸ்டுகள் வங்கியில் உள்ள பணத்தை பெற தங்களது நடத்தைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளிடம் பெற வேண்டும்.
இந்த நிதியுதவி தவிர அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கும் நிதியுதவி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏ.கே. 47, ஏ.கே. 56, ஏ.கே. 74 ரக துப்பாக்கி ஒவ்வொன்றுக்கும் ரூ. 25,000, ஆர்.பி.ஜி. துப்பாக்கிக்கு ரூ.3,000, ராக்கெட்டுக்கு ரூ. 1000, ரிமோட் கன்ட்ரோல் கருவிக்கு ரூ. 3,000, நாட்டு வெடிகுண்டுக்கு ரூ.1000, கண்ணிவெடிக்கு ரூ. 3,000, சிறிய ரக ஏவுகணைக்கு ரூ. 20,000, செயற்கைக்கோள் தொலைபேசிக்கு ரூ. 10,000 ஆயிரம் வழங்கப்படும்.
இத்திட்டம் பற்றி மாவோயிஸ்டுகள் அறிந்தால் அவர்கள் கண்டிப்பாக அமைதியான வாழ்க்கையை நடத்த விரும்புவர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications