வரி ஏய்ப்பை காட்டி கொடுப்பவர்களுக்கு 20 சதவிகிதம் கமிஷன்: மத்திய அரசு முடிவு
டெல்லி: வரி ஏய்ப்பு செய்வோரை காட்டிக் கொடுத்தால், அப்படி செய்வோருக்கு 20 சதவீத கமிஷன் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்கவரி, கலால்வரி, சேவை வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு பெரும்தொகை வருமானமாக வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட் செலவுகளில் பெரும் பங்கு இந்த வரிகள் மூலம் தான் சரிக்கட்டப்படுகிறது.
ஆனால் ஏராளமானோர் உரிய வரியைச் செலுத்தாமல் அரசை ஏமாற்றுகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பின் மதிப்பு பலகோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு உத்திகளைக் கையாளவுள்ளது. ரகசியமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்கின்றது.
அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரியில் இருந்து ஒரு பகுதியை கமிஷனாக கொடுக்கின்றது. இதே போன்று வரி ஏய்ப்பு பற்றி யார் தகவல் கொடுத்தாலும் அவர்களுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு சன்மானம் அளிக்கின்றது.
தற்போது மத்திய அரசு இந்த சன்மானத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. சன்மானத் தொகை உயர்த்தப்பட்டால் பலர் தகவல் கொடுக்க முன்வருவார்கள். இதனால் அரசின் வருமானமும் அதிகரிக்கும்.
எனவே வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 சதவிகிதம் வரை சன்மானம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.
இது சுங்கவரி, கலால் வரி, சேவை வரிக்கும் பொருந்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications