கொலை மிரட்டல் எதிரொலி-ஜெ.வுக்கு உச்சகட்ட பாதுகாப்புப தர அதிமுக கோரிக்கை
சென்னை: மதுரை வந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் அதிமுக சார்பில் மனு தரப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெயா டிவிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் மதுரை மாவட்டம் கள்ளந்திரி (மேலூர் அருகே உள்ளது) என்ற ஊரைக் குறிப்பிட்டு, மதுரைக்கு வரக் கூடாது. வந்தால் குண்டு வைத்துக் கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள். அண்ணனைப் பகைத்துக் கொள்ளாதே என்று மிரட்டி எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரணிடம் அதிமுக சார்பில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில், புனித ஜார்ஜ் கோட்டைக்கு நேற்று காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ மற்றும் சேகர்பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தார்கள்.
அவர்கள், தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை, சந்தித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தார்கள். அதேபோல, உள்துறைச் செயலாளர் கே.ஞானதேசிகனிடமும் ஒரு மனுவை கொடுத்தார்கள்.
அந்த மனுவில்,
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு, மதுரை கள்ளந்திரியை சேர்ந்த அறிவொளி என்பவர் எழுதிய கடிதத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஒழித்துக் கட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயாவும், அவரது கூட்டமும், மதுரையில் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார்கள். சாக மதுரைக்கு போங்கள். இதை நேரடி ஒளிபரப்ப ஜெயா டி.வி. மதுரைக்கு வரவும். அண்ணனை பகைக்காதே. மதுரை வராதே. ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம், உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ்' பாதுகாப்பில் வருபவரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார், ஜெயா டி.வி.யின் சார்பில் டி.ஜி.பி.யிடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கொலை மிரட்டல் விடப்பட்ட கடிதத்தின் நகலும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், ஜெயலலிதாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் வெளியில் வந்த பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை, திருச்சியில் நடந்த கூட்டங்களுக்கே போதிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் தரப்படவில்லை. இதனால்தான் இப்போது கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளோம். பாதுகாப்பு தரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications