இமாச்சலில் ஆப்பிள் உற்பத்தி அமோகம்-விலை குறைய வாய்பப்பு
சிம்லா: இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஆப்பிள் விலை மேலும் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஆப்பிள் விலை குறைவாகவே உள்ளது. தற்போது மேற்கண்ட முக்கிய மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் இந்த விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 முதல் 60 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் இமாச்சல பிரதேசத்தில் நேரடியாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து, நாட்டின் பல பகுதிகளுக்கு அளித்து வருகின்றன. இதனால், இனிவரும் மாதங்களில் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களிலேயே அதானி நிறுவனம், மிக அதிக அளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. இவ்வாண்டில், இந்நிறுவனம் இதுவரையிலும் 25,000 டன் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்துள்ளது. இதேபோன்று, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனமும் இதுவரை 12,000 டன் ஆப்பிள்களை கொள்முதல் செய்துள்ளது.
தேவ்பூமி என்ற நிறுவனமும் 1,000 டன் ஆப்பிள்களை கொள்முதல் செய்துள்ளது.
ஆப்பிள் கொள்முதல் குறித்து அதானி அக்ரி பிரஷ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ராமானுஜம் கூறும்போது, நடப்பு ஆண்டில், ஆப்பிள் விளைச்சல் அமோகமாக உள்ளது. சென்ற ஆண்டில், ஒரு கிலோ ஆப்பிளை ரூ.55-60 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கினோம். இந்த ஆண்டு ரூ.31 என்ற விலையில் வாங்குகிறோம். குறிப்பாக, ராயல் டெலீசியஸ் என்ற உயர் வகை ஆப்பிள்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இதுவரை, இமாச்சலபிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆப்பிள்களை கொள்முதல் செய்துள்ளோம். அடுத்த 15 தினங்களில் காஷ்மீர் பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். அப்போது, இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications