ராசாவை டிஸ்மிஸ் செய்யக் கோரி ராஜ்யசபாவில் அதிமுக அமளி
டெல்லி: ராஜ்யசபாவில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அதிமுக இன்று கிளப்பியது. அமைச்சர் ராசவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கூச்சலிட்டதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை அவை கூடியதும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரம் குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் பிரச்சனை கிளப்பினார். இதுகுறித்துப் பேச தான் ஏற்கெனவே அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், அவரது நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறிவிட்டார். அத்தோடு மார்க்சிஸ்ட் எம்பி பிருந்தா காரத்தை அவர் பேச அழைத்தார்.
ஆனால், தனக்கு பேச அனுமதி தர வேண்டு்ம் என்று மைத்ரேயன் தொடர்ந்து வற்புறுத்தினார். அனுமதியின்றி நீங்கள் பேச முடியாது என்று அன்சாரி கூறியதோடு, மைத்ரேயன் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் அறிவித்தார்.
இந் நிலையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து மத்திய தணிக்கைத்துறை தலைவர் தெரிவித்த கருத்துகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியபடி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளை உயர்த்திக் காட்டியபடி "ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று மைத்ரேயன் கோஷமிட்டார்.
அப்போது மைத்ரேயன் பேச அனுமதிக்க வேண்டும் என்று சந்தன் மித்ரா உள்ளிட்ட பாஜக எம்பிக்களும் கூச்சலிட்டனர்.
ஆனாலும், மைத்ரேயன் பேச அனுமதி மறுத்த அன்சாரி அவரை உட்காருமாறு உத்தரவிட்டார். உங்கள் நடவடிக்கை அவைக்கு உகந்ததாக இல்லை, நீங்கள் உட்கார வேண்டும், ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள். நீங்கள் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. டிவியிலும் காட்ட மாட்டார்கள் என்றார் அன்சாரி.
ஆனாலும் மைத்ரேயன் அமர மறுத்து கோஷமிட்டதால் அவையை 15 நிமிடங்களுக்கு அன்சாரி ஒத்திவைத்தார்.