அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை
டெல்லி: மத்திய, மாநில அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தடை விதித்துள்ளார்.
மத்திய, மாநில அமைச்சர்கள் சமீபகாலமாக அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சரத்பவார், ஆனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வதாகத் தெரிகிறது.
முன்பு பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அடிக்கடி வெளிநாடு செல்வதாக அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. பிரதமர் எப்போதாவதுதான் நாட்டில் இருக்கிறார் என்றும் கிண்டலடித்தன எதிர்க்கட்சிகள். தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் இஷ்டத்திற்கு வெளிநாடுகளுக்குப் போவது அதிகரித்து வருகிறது.
அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வெளிநாட்டு மோகத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். இதையடுத்து பிரதமர் உத்தரவின்படி இனி மத்திய, மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய, மாநில அமைச்சர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்த முழு விவரங்களையும் பிரதமர் அலுவலகத்திடம் முன் கூட்டியே கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்.
அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவர்கள் எப்பொழுது திரும்பி வருகின்றனர் என்பதைக் கண்காணிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி அமைச்சர்கள் தாங்கள் வெளிநாட்டுக்கு போகும் பொழுதெல்லாம் இதற்கு முன்பு எத்தனை தடவை வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளனர் என்ற தகவலையும் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எந்த அமைச்சராவது குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு அடிக்கடி சென்றால் அது பற்றியும் தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த உத்தரவு அமைச்சரவை செயலகம் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications