உ.பியில் மரணம்-20 வயது காவலரின் உடலுக்கு பதில் வந்த 40 வயது நபரின் உடல்
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உத்தரபிரதேசத்தில் பயிற்சியின்போது உயிர் இழந்தார். அவரது வீட்டிற்கு அவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடல் வந்திருப்பதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கீழமூட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சுனில் குமார்(20). இவர் கடந்த மார்ச் மாதம் தான் மத்திய ரிசர்வ் போலீசில் சேர்ந்தார். இதையடுத்து அவர் உத்தரபிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு சுனில் குமார் உயிர் இழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் வந்தது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்து சேர்ந்தது. புதுக்கடை போலீசாரும், ரிசர்வ் படை போலீசாரும் உடலுடன் வந்தனர்.
கவலையில் ஆழ்ந்திருந்த உறவினர்கள் உடலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணம் 20 வயதுடைய சுனில் குமாரின் உடலுக்கு பதிலாக 40 வயதுடைய வேறொருவரின் உடல் வந்திருப்பது தான். இந்த தகவல் பரவியதையடுத்து சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து குவிந்தனர்.
இது குறித்து ரிசர்வ் படை மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடந்த 28-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த 4 பேர் மயங்கி விழுந்ததாகவும், அதில் 2 பேர் மரணம் அடைந்ததாகவும், அவர்களின் உடல் மாறி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுனில் குமாரின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவர் உறவினர்கள் தற்போது வந்துள்ள உடலை ஏற்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த உடல் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications