உமாசங்கருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்-சிவகாமி கோரிக்கை
சேலம்: பொய் புகாரால் பாதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி கூறியுள்ளார்.
சமூக சமத்துவப் படை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பேரணி நடத்தினர். இதில் எழுத்தாளரும், சமூக சமத்துவப்படை நிறுவன தலைவருமான சிவகாமி தலைமை வகித்து பேசியதாவது,
சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடு, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலர், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பொய் புகாரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மீதான வழக்கை ரத்து செய்வதோடு, அவருக்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.