'அத்தைக்கு மீசை முளைத்தால் பார்ப்போம்': வைகோ
கோவை: உலக நாடுகள் எல்லாம் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, அதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே நிருபமா ராவ் இலங்கை சென்றுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கான முயற்சிகளை கேரள அரசு செய்து வருகிறது. அணை இடிக்கப்பட்டால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
நிருபமா ராவ் இலங்கை செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம்தான். உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, போர் குற்றவாளியாக ஆக்குவதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒரு முயற்சிதான் நிருபமா ராவின் பயணம்.
அதிமுக கூட்டணி மிக பலமாகத்தான் இருக்கிறது. கூடவே மக்களும் இணைந்திருக்கிறார்கள். கோவை மற்றும் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் தெரியும்.
ஆளும் திமுக அரசு போட்டிக் கூட்டம் நடத்துவதாக, கூட்டிய கூட்டம் எவ்வளவு பெரிய தோல்வியில் முடிந்தது என மக்கள் பார்த்தார்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் அதிமுகவுக்கு கூட்டணி ஏற்படுமா என்று கேட்டதற்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் பார்ப்போம் என்றார்.