விபத்தில் சிக்கி போராடியவர்களை காப்பாற்றிய வேலூர் கலெக்டர்
வேலூர்: வாணியம்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியே வந்த மாவட்ட கலெக்டர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவரது மனைவி லட்சுமி (60). இவர்களது மகன் ரவி (25) . இவர்கள் மூவரும் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவி ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கார் வாணியம்பாடியை அடுத்துள்ள வளையாம்பட்டு மேம்பாலம் அருகே வந்தபோது எதிர்பாராவிதமாக தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அப்போது அந்த வழியே வந்த வேலூர் மாவட்ட கலெக்டர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தந்தையையும், மகனையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுப்பிரமணி உயிர் இழந்தார். மருத்துவமனையில் ரவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.