விடுதலைப் புலிகள் கட்டிய பங்கர்களைப் பார்வையிட்ட நிரூபமா ராவ்
கொழும்பு: இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தமிழர் தாயகப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். விடுதலைப் புலிகள் கட்டியுள்ள 3 உறுதியான பதுங்கு குழிகளையும் (பங்கர்கள்) அவர் பார்வையிட்டார்.
இலங்கையில் போர் முடிந்த நிலையில் அங்கு தமிழர்கள் மறு குடியர்த்தப்படும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்காக இந்திய அரசு ஏராளமான நிதியுதவியையும், பொருளுதவியையும் அளித்துள்ளது. ஆனால் இவை தமிழர்களிடம் போய்ச் சேரவில்லை என்று புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தற்போது நிரூபமா ராவ் இலங்கை சென்றுள்ளார். நேற்று அவர் காலை வவுனியாவுக்குச் சென்றார். அங்குள்ள மானிக் பார்ம் முள்வேலி முகாமுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் அவர் சந்தித்தார். அவர்களிடம் பேசினார். இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
அதன் பின்னர் வவுனியாவுக்கான அரசு ஏஜெண்டுன் நிரூபமாராவ் பேச்சு நடத்தினார். கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
வவுனியாவைத் தொடர்ந்து கிளிநொச்சிக்கு சென்ற நிருபமாராவ், அங்கு மறுகுடியமர்த்தப்பட்டு உள்ள தமிழர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு, உபகரணங்கள், சிமெண்ட் மூட்டைகள், மேற்கூரை ஷீட்கள் ஆகியவற்றை வழங்கினார். ஓமந்தையிலும் அவர் உபகரணங்கள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார் நிருபமா ராவ். அங்கு பொதுநல அமைப்புகளின் தலைவர்களை சந்தித்த அவர், போருக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டறிந்தார். சவால்களை சமாளிக்க இலங்கை அரசுடன் இந்தியா துணைநிற்கும் என்று கூறினார்.
யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளால் கட்டப்பட்ட 3 பதுங்கு குழிகளையும் நிருபமா ராவ் பார்த்தார்.
பின்னர், வவுனியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும், நிருபமா ராவ் ஆலோசனை நடத்தினார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.