தலைமை தகவல் ஆணையராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வந்த ஸ்ரீபதி நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி பொறுப்பேற்றுள்ளார்.
இதுதொடர்பாக நடந்த பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீபதி, தலைமைத் தகவல் ஆணையராக எப்போது நான் பொறுப்பேற்கிறேன் என்பது தெரியவில்லை. அதுகுறித்த தேதி முடிவானவுடன் அதை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.
இந் நிலையில் அவர் இன்றே பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். ஆனால் கலந்து கொள்ள வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வரவில்லை. மாறாக தான் கேட்ட தகவல்களை அரசு தரவில்லை. மேலும் இந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.