தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : நெல்லையில் போராட்டம் அறிவிப்பு
நெல்லை: தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர்.
அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுபோல் நெல்லை மாவட்ட மள்ளர் இலக்கிய கழகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
இம்மானுவேல் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் வெண்கல சிலை அமைத்திடவும், சிலையை உடைத்த விஷமிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடவும் தவறினால் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.