விப்ரோவின் முக்கியப் பொறுப்பில் அஜீம் பிரேம்ஜி மகன்!

விப்ரோவின் முக்கியப் பொறுப்புகளில் தனது மகனை அமர வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என பல முறை அஜீம் பிரேம்ஜி கூறிவந்தார். இந்த நிலையில் திடீரென்று ரிஷத் சிஎஸ்ஓ பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது கார்ப்பரேட் வட்டாரத்தை புருவம் உயர வைத்துள்ளது.
34 வயதான ரிஷத் பிரேம்ஜி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர். விப்ரோ நிறுவனத்தின் 32 பேர் கொண்ட உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இப்போது அவருக்கு மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு விப்ரோவில் இணைந்த ரிஷத், சிட்டி டெக்னாலஜீஸ் சர்வீஸஸ் நிறுவனம் மற்றும் கல்லாகர் பைனான்ஸியல் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களை விப்ரோவுடன் இணைத்ததில் பெரும் பங்கு வகித்தார்.
நிறுனவனத்தின் கருவூலப் பொறுப்பை இதற்கு முன் அவர் கவனித்து வந்தார். அத்துடன், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் பேசும் பொறுப்பையும் அவரே கவனித்து வந்தார்.
இப்போது தலைமை செயல்திட்ட அலுவலராக ரிஷத் பதவி உயர்த்தப்பட்டுள்ளது, நிறுவனத்தின் தலைமையில் விரைவில் மாற்றம் வரும் என்பதன் அறிகுறியே என்று விப்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிஷத் தம்பி தாரிக் பிரேம்ஜி தற்போது விப்ரோ பவுண்டேஷனின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் இப்போதைக்கு விப்ரோ டெக்னாலஜீஸுக்கு வரமாட்டார் என்றும், சில காலத்துக்கு விப்ரோ பவுண்டேஸன் மூலம் கல்விப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ரிஷத் நியமனம் குறித்து அஜீம் பிரேம்ஜி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications