காவல் நிலையத்தில் கைதி தற்கொலை-சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 காவலர்கள் கைது
கடலூர்: காவல் நிலையத்தில் கைதி தற்கொலை செய்தது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சக்தி விளாகத்தைச் சேர்ந்தவர் தங்க ராஜ். இவரைக் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அப்போது சப்- இன்ஸ்பெக்டராக இருந்த சிவஞானம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றார்.
தங்க ராஜ் காவல் நிலையத்தில் திடீரென்று மரணம் அடைந்தார். அவர் இறப்பில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. போலீஸ் அராஜகத்தை எதிர்த்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தங்கராஜ் அப்பாவி என்றும், சப்- இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே அவரை அழைத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரை விடுவிக்க ரூ. 15,000 பணம் கேட்டு அதில் ரூ. 5,000 வாங்கியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
தங்க ராஜை காவல் நிலையத்தில் வைத்து சப்- இன்ஸ்பெக்டரும், காவலர்கள் பொன்னம்பலம், சிவகொழுந்து ஆகியோரும் அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் தான் அவர் விஷம் குடித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பேரில் கடலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சண்முக நாதன் அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications