தலைவர் பதவியை சோனியா தியாகம் செய்ய வேண்டும்: பாஜக
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை நேரு, இந்திரா குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு சோனியா விட்டுத் தர வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
சோனியா நான்காவது முறையாக கட்சித் தலைவராகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் ஜனநாயகரீதியாக செயல்படும் கட்சி என்றால், அதற்குரிய சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் வட்ட, மாவட்ட மற்றும் மாநில தலைவர்களாக இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் அந்தப் பதவிக்கு வர முடியாது.
அந்த விதிமுறை தேசிய தலைவர் பதவிக்கும் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும். பிரதமர் பதவியை தியாகம் செய்தவர் என்று சோனியாவை காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும், எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், கட்சித் தலைவர் பதவியையும், நேரு, இந்திரா குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு சோனியா விட்டுத்தர வேண்டும்.
தலைவர் பதவியை சோனியா தியாகம் செய்வாரா?. காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார் பிரசாத்.
40 தடவை சோனியாவை தலைவர் ஆக்குவோம்-காங்கிரஸ்:
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி, சோனியாவை நான்காவது முறையாக என்ன, கட்சி விரும்பினால் 40 தடவை கூட தலைவர் ஆவார் என்றார்.
காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறுகையில், சோனியாவை தலைவர் ஆக்கியது, காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு. இதுபற்றி பாஜக பேச வேண்டிய தேவையும் இல்லை, அருகதையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications