சென்னையில் லேசான மழை-மதுரை, நெல்லையில் சதம் போட்ட வெயில்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முதல் லேசான மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. அதேசதமயம், தென் மாவட்டங்களான மதுரை மற்றும் நெல்லையில் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சமீப நாட்களாக வானிலை மாறி மாறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து மக்களை குளிர்ச்சிப்படுத்தியது.
ஆனால் தற்போது மறுபடியும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.
மதுரை மாநகரில்தான் வெயில் கடுமையாக உள்ளது. இன்னொரு கோடை காலம் போல அங்கு அனலாக உள்ளது. நேற்று மதுரையில், 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நெல்லையில் 100 டிகிரிக்கு வெயில் அடித்தது.
திருச்சி, புதுச்சேரியில் 98 டிகிரியும், நாகப்பட்டினம், கடலூரில் 97 டிகிரியும், வேலூர் 95, தூத்துக்குடி 93, சேலம், கன்னியாகுமரியில் 92 டிகிரியும் வெயில் அடித்தது.
சென்னை, கோவையில் நேற்றைய வெயில் அளவு 91 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.
இன்று காலையிலிருந்து சென்னையில் வானம் மேகமூட்டமாக உள்ளது. சில காலையில் லேசான மழை பெய்தது. தற்போது தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மேற்கு நோக்கி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications