கடத்தப்பட்ட 3 போலீஸாரும் உயிருடன் உள்ளனர்-மாவோயிஸ்டுகள் அறிவிப்பு
பாட்னா: பீகாரில், கடத்தப்பட்ட 3 போலீஸாரும் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர் மாவோயிஸ்ட் நக்சலைட்கள். அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சப் இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார் சின்ஹா, அபய் பிரசாத் யாதவ் மற்றும் ஹவில்தார் இதேஷம் கான் ஆகியோரை நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க கெடுவும் விதித்திருந்தனர். அதற்குள் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் கெடு முடிந்த நிலையில் கடத்தப்பட்டவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் அபய் பிரசாத் யாதவை சுட்டுக்கொன்று விட்டதாக மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து செய்தி வந்தது. இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட மூவருமே உயிருடன்இருப்பதாக இன்று நக்சலைட்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று தன்னைக் கூறிக் கொண்ட அவினாஷ் என்பவர் பத்திரிகை அலுவலகங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மூன்று பேருமே பாதுகாப்பாக, பத்திரமாக உள்ளனர். இதை நீங்கள் நம்புவதற்காக, 3 பேரின் பேச்சுக்களும் அடங்கிய ஆடியோ சிடி அனுப்பி வைக்கப்படும் என்றார்.
அப்படியானால் அபய் பிரசாத் யாதவ் கொல்லப்பட்டதாக முன்பு ஏன் கூறினீர்கள் என்ற கேள்விக்கு, இந்த பிணையாளிகள் விவகாரத்தை கையாண்டு வருவோர் எங்களை சாதாரணமாக எடை போட்டு அணுகி வந்தனர். அவர்களது மனதில் பீதைய ஏற்படுத்தவே அவ்வாறு கூறினோம் என்றார்.
அதேசமயம், மாவோயிஸ்டுகள் ஹவில்தார் லோக்ஸ் டெடே என்பவரை கொன்று உடலை கஜ்ரா போலீஸ் நிலையப் பகுதியில் வீசி விட்டுச் சென்றனர். முதலில் இதுதான் அபய் பிரசாத்தின் உடல் என கருதப்பட்டது. ஆனால் அது ஹவில்தார் டெடேவின் உடல் என்பது பின்னர் தெரிய வந்தது.
இதுகுறித்து அவினாஷ் கூறுகையில், எங்களது கமிட்டி எடுத்த முடிவின்படி டெடேவை கொன்று சாலையில் போட்டு விட்டோம் என்றார்.
பிணைக் கைதிகளை எப்போது விடுவிப்பீர்கள் என்ற கேள்விக்கு, முதலில் ஆயுதங்களை அவர்கள் (பாதுகாப்புப் படையினர்) கீழே போட்டுவிட்டு எங்களுடன் பேச முன்வர வேண்டும். அதற்கு குறுகிய காலமே உள்ளது. இதைச் செய்தால்தான் எங்களிடம் உள்ள 3 பேரையும் விடுவிப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்றார்.
இதற்கிடையே 3 போலீஸாரையும் மீட்க தீவிர வேட்டை நடந்து வருகிறது. முதல்வர் நிதீஷ் குமார் இதுதொடர்பாக இன்று அவசர ஆலோசனை ஒன்றையும் மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications