சென்னை நட்சத்திர ஹோட்டல் தாக்குதல் பின்னணியில் முன்னணி டிவியின் பிரமுகருக்குத் தொடர்பு-ஜெ. புகார்
சென்னை: சென்னை நட்சத்திர ஹோட்டலை ரவுடிக் கும்பல் வெறித்தனமாக தாக்கி சூறையாடிய சம்பவத்தில் முக்கிய தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி நிர்வாகிக்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னை கிண்டியில் உள்ள செக்கர்ஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய ரவுடிக் கும்பல் 50 ஆட்டோக்கள், கார்களில் வந்து கண்மூடித்தனமாக ஹோட்டலைத் தாக்கி சூறையாடினர்.
இதில் ரூ. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலின் உரிமையாளரான வினோஜ் செல்வம் பாஜக பிரமுகர் ஆவார். அவரையும் தாக்க முயன்றுள்ளது அந்தக் கும்பல். ஆனால் அப்போது அங்கு அவர் இல்லாததால் ஓடி விட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு ஆட்டோ டிரைவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அதில்,
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய சத்துணவு ஊழியர்கள் கைது, டாஸ்மாக் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அச்சுறுத்தல் செய்யும் திமுக அரசு, சென்னையில் பிரதானப் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் சென்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, முதல்வர் மீது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முதல்வரின் குடும்பத்தினரின் தொலைக்காட்சியின் நிர்வாகி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.